சினிமா செய்திகள்

31 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் பிரபு - சுகன்யா ஜோடி

ரக்‌ஷன் நாயகனாக நடிக்கும் ‘மேரி கோல்ட்’ படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரபு -சுகன்யா ஜோடி 31 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ‘மேரி கோல்ட்’ படத்தில் இணைந்து நடிக்கிறார்கள்.

விஜய் டிவியில் ‘கலக்க போவது யாரு’ மூலம் தொகுப்பாளராக ரக்‌ஷன் அறிமுகமானார். இவர் தற்போது ‘குக் வித் கோமாளி’ உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவர் 2020ல் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நாயகனாக நடித்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற படத்தில் அவரது நண்பனாக ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ‘கன்னிவெடி, என் காதல் தேவதை, மறக்குமா நெஞ்சம், வேட்டையன், இதயம் முரளி’ உள்ளிட்ட படங்களிலும் ரக்‌ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரக்‌ஷன் சமீபத்தில் நடித்த ‘மொய் விருந்து’ படம் விரைவில் வெளியாக உள்ளது.

‘மேரி கோல்ட்’ திரைப்படம்

டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தனது 21-வது படைப்பாக ‘மேரி கோல்ட்’ திரைப்படத்தை அறிவித்துள்ளது. ஆர். ரவீந்திரன் தயாரிக்கும் இப்படத்தை பிரியன் ராஜேந்திரன் இயக்குகிறார். படப்பிடிப்புக்கான பூஜைகள் நடைபெற்றுள்ளதாகவும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படத்தில், ரக்‌ஷன் நாயகனாகவும் நம்ரிதா நாயகியாகவும் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தில் சிங்கம்புலி, வடிவுக்கரசி, இமான் அண்ணாச்சி, விவேக் பிரசன்னா, ஸ்டாலின் மற்றும் வடிவேல் முருகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மல்லிகார்ஜுன் ஒளிப்பதிவு செய்ய, சித்து குமார் இசையமைக்கும் இந்தப்படத்தின் படத்தொகுப்பை ஆர். நிர்மல் கையாளுகிறார்.

31 ஆண்டுகளுக்கு பின் இணையும் பிரபு - சுகன்யா ஜோடி

இப்படத்தில் 'செந்தமிழ்ப் பாட்டு', 'சின்ன மாப்ளே', 'மிஸ்டர் மெட்ராஸ்' ஆகிய படங்களில் இணைந்து நடித்த பிரபு மற்றும் சுகன்யா ஜோடி 31 ஆண்டுகளுக்கு பிறகு இணைகிறார்கள்.

உணர்வுப்பூர்வ குடும்ப கதை:

தென் தமிழகத்தின் பின்னணியில், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி நகரங்களை சேர்ந்த கதை மாந்தர்களுக்கு இடையே நடைபெறும் சுவாரஸ்யமான போட்டியையும் அலாதியான வாழ்வியலையும் மையமாக கொண்டு ஒரு உணர்வுப்பூர்வமான குடும்ப கதையாக இத்திரைப்படம் உருவாகிறது.

திருநெல்வேலி, தூத்துக்குடி பின்னணியில் நடைபெற்று வரும் ‘மேரி கோல்ட்’ திரைப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.