பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் பிரபு, விஜய் வர்மா நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.
‘ரைட்டர்’ படத்தின் பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் ‘பிக்பாஸ்’ புகழ் விஜய் வர்மா நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் தொடக்க விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இதில், முக்கிய கதாபாத்திரத்தில் பிரபு நடிக்கிறார். இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் மற்றும் ஏவியட் பிக்சர்ஸ் சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்கின்றனர்.
டார்க் ஹியூமர் ஜானரில், வித்தியாசமான கதைக்களத்தில் திரில்லர் காமெடி திரைப்படமாக உருவாகவுள்ள இப்படத்தில் நடிகர் விஜய் வர்மாவுடன் பிரபல நடிகை நாயகியாக நடிக்கவுள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவர்களுடன் முத்து குமார், ரமேஷ் திலக், திலீப் சுப்பராயன், தீனா, அருண் மாதேஸ்வரன், கவிதா பாரதி மற்றும் அவினாஷ் ரகுதேவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். இப்படத்தில் டிசி படத்தில் பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞர்கள் பணியாற்றவுள்ளனர்.
படப்பிடிப்பின் முதல் நாளான இன்று, நடிகர் விக்ரம் பிரபு மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் படப்பிடிப்புத் தளத்திற்கு நேரில் வருகை தந்து, படக்குழுவினரை சந்தித்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இவர்களின் வருகை படக்குழுவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.
வித்தியாசமான கதைக்களத்தில், அனுபவம் வாய்ந்த நடிகர் பிரபு மற்றும் இளம் தலைமுறை நடிகர்கள் இணையும் இந்தப் புதிய படம், ரசிகர்களுக்கு ஒரு புதுமையான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் தலைப்பு மற்றும் இதர முக்கிய தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளன.