சினிமா செய்திகள்

பிரபு, விஜய் வர்மா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் பிரபு, விஜய் வர்மா நடிக்கும் புதிய படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்

பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் பிரபு, விஜய் வர்மா நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜை நடைபெற்றுள்ளது.

‘ரைட்டர்’ படத்தின் பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் ‘பிக்பாஸ்’ புகழ் விஜய் வர்மா நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இதில், முக்கிய கதாபாத்திரத்தில் பிரபு நடிக்கிறார். இவ்விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் பா. ரஞ்சித், அருண் மாதேஸ்வரன் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் மற்றும் ஏவியட் பிக்சர்ஸ் சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்கின்றனர்.

டார்க் ஹியூமர் ஜானரில், வித்தியாசமான கதைக்களத்தில் திரில்லர் காமெடி திரைப்படமாக உருவாகவுள்ள இப்படத்தில் நடிகர் விஜய் வர்மாவுடன் பிரபல நடிகை நாயகியாக நடிக்கவுள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவர்களுடன் முத்து குமார், ரமேஷ் திலக், திலீப் சுப்பராயன், தீனா, அருண் மாதேஸ்வரன், கவிதா பாரதி மற்றும் அவினாஷ் ரகுதேவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். இப்படத்தில் டிசி படத்தில் பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞர்கள் பணியாற்றவுள்ளனர்.

பூஜை விழாவில் பேசிய பிரபு, பிராங்க்ளின் ஜேக்கப் கூறிய வித்தியாசமான கதைக்களம் தன்னை கவர்ந்ததாக தெரிவித்தார். புதிய தலைமுறை படைப்பாளிகளுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி இருப்பதாகவும், இப்படம் சிறப்பான அனுபவத்தை வழங்கும் என நம்புவதாகவும் கூறினார்.

இயக்குநர் பா. ரஞ்சித், பிராங்க்ளின் ஜேக்கப்பின் அணுகுமுறை தனித்துவமானது என்றும், இப்படம் வித்தியாசமான களத்தில் உருவாகும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இயக்குநர் அருண் மாதேஸ்வரனும் பிராங்க்ளினின் திறமையை பாராட்டியதுடன், இப்படத்தின் கதை மிகவும் சிறப்பாக இருப்பதாக தெரிவித்தார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் மாத இறுதியில் சென்னையில் தொடங்கவுள்ளது. படத்தின் டைட்டில் மற்றும் பிற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.