சினிமா செய்திகள்

தாயின் இறுதி சடங்கை வைத்து விமர்சனம்.. பதிலடி கொடுத்த பிரகாஷ்ராஜ்

தாயின் இறுதி சடங்கை மதம் ரீதியில் நடத்திய நீங்கள் எப்படி கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்கிறீர்கள் என்ற விமர்சனத்திற்கு பிரகாஷ்ராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ள பிரகாஷ் ராஜ், எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை இயல்பாக வெளிப்படுத்தும் திறமையால் தனி அடையாளம் பெற்றவர். பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான `டூயட்' படம் மூலம் தமிழில் அறிமுமானவர் 400-க்கு மேற்பட்ட படங்களில், 6 மொழிகளில் உருவான படங்களில் நடித்துள்ளார்.

உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பிரகாஷ் ராஜின் தாயார் ஸ்வர்ணலதா (வயது 86), சிகிச்சை பெற்று வந்த நிலையில் சமீபத்தில் உயிரிழந்தார்.

கிறிஸ்தவ மத நம்பிக்கைகளைப் பின்பற்றிய தாயின் மரணத்திற்கு பிறகு, ஒரு தேவாலயத்தில் பாரம்பரிய முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டார். இறுதிச் சடங்கின் காட்சிகள் இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து, பிரகாஷ் ராஜ் தன்னை ஒரு நாத்திகர் என்று முன்பு கூறியிருந்ததைச் சுட்டிக்காட்டி, எக்ஸ் தளத்தில் சிலர் விமர்சித்தனர்.

எக்ஸ் தள பயனர் ஒருவர், ‘பிரகாஷ் ராஜ் தன்னை ஒரு நாத்திகர் என்றும், கடவுள் மீது நம்பிக்கை இல்லை என்றும் கூறிக்கொள்கிறார். ஆனால், தனது தாயின் இறுதிச் சடங்குகளை கிறிஸ்தவ மரபுகளின்படியே செய்கிறார்’ என்று விமர்சித்திருந்தார்.

அதற்கு பதிலளித்திருக்கும் பிரகாஷ் ராஜ், “ஆம், எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை தான். ஆனால் என் தாய்க்கு கடவுள் நம்பிக்கை உண்டு. அவரது நம்பிக்கையை மறுக்க நான் யார்? அவரது நம்பிக்கையின்படி தானே உடலை அடக்கம் செய்ய முடியும். இதுதானே ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அடிப்படையான மரியாதை. வெறுப்பை தூண்டுபவர்கள் இதை புரிந்து கொள்வார்களா?” என்று பதிலடி கொடுத்துள்ளார்.