சினிமா செய்திகள்

பிரியங்கா சோப்ரா பிறந்தநாள்: “வாரணாசி” பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட ராஜமவுலி

மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா நடிக்கும் ‘வாரணாசி’ திரைப்படம் 2027ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி வெளியாகவுள்ளது.

பிரியங்கா சோப்ராவின் 44-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இயக்குநர் ராஜமவுலி புதிய போஸ்டரை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் ‘வாரணாசி’ திரைப்படத்திலிருந்து, பிரியங்கா சோப்ராவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

‘மந்தாகினி’யாக மிரட்டும் பிரியங்கா

இப்படத்தில் பிரியங்கா சோப்ரா 'மந்தாகினி' என்ற வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இயக்குநர் ராஜமவுலி , “அவள் புன்னகைக்கும் போது பேரழகு.. புன்னகைக்காத போது பேரனல் ... வாரணாசியில் மந்தாகினியாக பிரியங்கா சோப்ரா” என பாராட்டியுள்ளார்.

வெளியாகியுள்ள போஸ்டரில், பிரியங்கா சோப்ரா சுருள் தலைமுடியுடன், முற்றிலும் கருப்பு நிற உடையில் மிகவும் ஆக்ரோஷமான மற்றும் வசீகரமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். இது உலகளவில் உள்ள அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

ரூ.1,400 கோடி பட்ஜெட்:

சுமார் ரூ.1,400 கோடி பிரம்மாண்ட செலவில் உருவாகும் இப்படம், இந்திய திரையுலக வரலாற்றிலேயே மிக அதிக செலவில் தயாரிக்கப்படும் திரைப்படமாகும். கி.பி. 512 முதல் தற்காலம் வரை, திரேதா யுகம் முதல் கலியுகம் வரை எனப் பல காலகட்டங்களை இணைக்கும் ஒரு அறிவியல் புனைகதை மற்றும் ஆன்மீக சாகசப் படமாக இது உருவாகிறது.

அண்டவெளியில் இருந்து பூமிக்கு வரும் விண்கல் ஆபத்தும், வாரணாசி படித்துறைகளின் ரகசியங்களும் இதன் மையக்கதை எனத் தெரிகிறது. ஐதராபாத், ஒடிசா, கென்யாவின் ஆப்பிரிக்க காடுகள் மற்றும் அண்டார்டிகாவின் உறைபனிப் பகுதிகள் என உலகம் முழுவதும் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

இப்படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் 'மகேஷ் பாபு' கதாநாயகனாக 'ருத்ரா' மற்றும் ‘ஸ்ரீராமர்' என இருவேறு பரிமாணங்களில் நடிக்கிறார். மலையாள முன்னணி நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் 'கும்பா' என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

விஜயேந்திர பிரசாத் கதையமைப்பில், எம்.எம். கீரவாணியின் இசையமைப்பில் உருவாகி வரும் 'வாரணாசி' திரைப்படம், 2027 ஏப்ரல் 7 அன்று உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக திரைக்கு வரத் திட்டமிடப்பட்டுள்ளது.