தென்னிந்திய சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ள ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது 29வது திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது.
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவான ‘பிளாஸ்ட்’ பிளாக்பஸ்டர் திரைப்பட வெற்றியை தொடர்ந்து கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் எம் எஸ் ஆனந்தன் இயக்கத்தில் ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு நடிக்கும் திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது.
ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு ஆகியோர் நடிக்கும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் ராஜீவ் மேனன், நாசர், ஜி.எம். சுந்தர், ரமேஷ் திலக், அருள் தாஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். விறுவிறுப்பான ஆக்ஷன் திரில்லராக நகைச்சுவை மற்றும் இதர அம்சங்களுடன் இத்திரைப்படம் உருவாக இருக்கிறது.
'சக்ரா' படத்தை இயக்கிய இயக்குநர் எம்.எஸ். ஆனந்தன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் இத்திரைப்படமானது உருவாக இருக்கிறது.
இத்திரைப்படம் குறித்து இயக்குநர் எம்.எஸ். ஆனந்தன் கூறும்போது, ஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் இப்படத்தை இயக்குவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும் படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கைய விட்டு நகரமால் இருக்க வைக்கும் ஒரு ஆக்ஷன் திரைப்படமாகவே இது இருக்கும் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டி, சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ளது.
திரைப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியூசராக அர்ச்சனா கல்பாத்தி, அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியூசராக ஐஸ்வர்யா கல்பாத்தி, நிர்வாக தயாரிப்பாளராக எஸ்.எம். வெங்கட் மாணிக்கம் பங்காற்றுகின்றனர். ரவி பஸ்ரூர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கிரைம் திரில்லர் பாணியில் உருவாகக்கூடிய இப்படத்தில் பிரியங்கா மோகன் பார்வையற்றவராக நடிக்க உள்ளதாகத் தெரிகிறது.