சினிமா செய்திகள்

ராஜ் கமல் நிறுவன மேலாளரிடம் பாஸ் ஸ்கேம் - ரூ.38 லட்சம் மோசடி செய்ய முயற்சி

நூதன சைபர் மோசடி முயற்சி குறித்து ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் சென்னை மாநகர சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசனின் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்திடம் வடமாநில சைபர் கிரைம் கும்பல் ஒன்று ரூ. 38 லட்சம் மோசடி செய்ய முயன்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தயாரிப்பாளரின் வாட்ஸ்அப் கணக்கை போன்று போலி கணக்கு தொடங்கி இந்த நூதன மோசடி அரங்கேற்றப்பட்டுள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவன அலுவலகம் இயங்கி வருகிறது. ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’, ரஜினி- கமல் இணைந்து நடிக்கும் படத்தையும் தயாரித்துவருகிறது.

இந்த நிறுவனத்தில் நிதிப் பிரிவை கவனிக்கும் முக்கிய ஊழியர் ஒருவரின் செல்போனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வாட்ஸ்அப் குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் முக்கிய நபரின் புகைப்படம் வைக்கப்பட்டு இருந்தது. அதில் பேசிய நபர், தனக்கு அவசரமாக பணத் தேவை இருப்பதாகக் கூறி, குறிப்பிட்ட சில வடமாநில வங்கி கணக்குகளுக்கு உடனடியாக ரூ. 38 லட்சம் பணத்தை ஆன்லைன் மூலம் டிரான்ஸ்பர் செய்யுமாறு கேட்டுள்ளார்.

அந்த மெசேஜை பார்த்த ஊழியர், தொடக்கத்தில் அது உண்மையான தயாரிப்பாளர்தான் என்று நம்பியுள்ளார். ஆனால், அந்த நபர் பேசிய விதம் மற்றும் தொடர்ந்து பணத்தை உடனே அனுப்புமாறு கொடுத்த அழுத்தம் காரணமாக ஊழியருக்கு சந்தேகம் எழுந்தது. உடனடியாக அந்த ஊழியர், சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரை நேரடியாகத் தொடர்பு கொண்டு இதுகுறித்து கேட்டுள்ளார். அப்போதுதான், தனது பெயரிலும், புகைப்படத்தையும் பயன்படுத்தி யாரோ போலி கணக்கு தொடங்கி மோசடி செய்ய முயல்வதை தயாரிப்பாளர் உறுதிப்படுத்தினார். அத்துடன், அந்த ஊழியரின் செல்போன் மற்றும் வாட்ஸ்அப் கணக்கையும் ஹேக் செய்து, நிறுவனத்தின் ரகசிய நிதி விபரங்களை திருட அந்த வடமாநில கும்பல் முயன்றதும் தெரியவந்தது. இதனால் ரூ. 38 லட்சம் நஷ்டமாவது தவிர்க்கப்பட்டது.

இந்த நூதன சைபர் மோசடி முயற்சி குறித்து ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் சென்னை மாநகர சைபர் கிரைம் போலீசாரிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பாஸ் ஸ்கேம் என்றால் என்ன?

உங்களது நிறுவன அதிகாரிகள், மேனேஜர்கள், தெரிந்தவர்களின் புகைப்படங்கள் வாட்ஸ் ஆப் டிபியாக வைத்துக் கொண்டு மெசேஜ் மூலம் பணம் கேட்டு அனுப்புவார்கள். இதை யாரும் நம்பி பணத்தை கொடுத்து ஏமாறாமல் சைபர் கிரைம் போலீஸில் புகார் அளியுங்கள்.