சென்னை,
ரஜினியின் ‘தலைவர் 173’ படத்தின் டைட்டில் நாளை காலை 10 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தின் பணிகளை முடித்துள்ள ரஜினிகாந்த், அடுத்ததாக தனது 173-வது திரைப்படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.
தற்காலிகமாக ‘தலைவர் 173’ என அழைக்கப்படும் இந்தப் படத்தை முதலில் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்குவார் என கூறப்பட்டது. ஆனால் தற்போது ‘ஓ மை கடவுளே’ மற்றும் ‘டிராகன்’ படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இந்தப் படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். மேலும், பிரபல இயக்குநர் ஷங்கர் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், மலையாள நடிகர் பாசில் ஜோசப் ரஜினிகாந்தின் மகனாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ரஜினிகாந்தை மையமாகக் கொண்ட சிறப்பு அதிரடி பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ‘தலைவர் 173’ படத்தின் டைட்டில் நாளை(ஜூன் 24) காலை 10 மணிக்கு வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
படத்தின் அறிவிப்பு போஸ்டரில் மருத்துவர்கள் பயன்படுத்தும் கத்தி உள்ளது. முன்னதாக, நடிகர் ரஜினி இப்படத்தில் சென்னையில் பிரபலமாக இருந்த 5 ரூபாய் டாக்டர் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.