சினிமா செய்திகள்

’கணவரும் நானும் பாதி நேரம் அதை பற்றிதான் பேசுவோம்’ - ரகுல் பிரீத் சிங்

ரகுல் பிரீத் சிங், தற்போது 'ராமாயணம்' திரைப்படத்தில் சூர்ப்பணகை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மும்பை,

நடிகை ரகுல் பிரீத் சிங், தனது கணவர் ஜாக்கி பக்னானியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, அவருடன் இணைந்து பணியாற்றும் அனுபவம் குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

பாதி நேரம் வேலை

அந்த பதிவில் அவர், "நாங்கள் இருவரும் எப்படி ஒன்றாக வேலை செய்கிறோம் என்று பலர் கேட்கிறார்கள். அதற்கான பதில் மிகவும் எளிமையானது. பாதி நேரம் வேலையைப் பற்றியும், மீதியுள்ள நேரம் என்ன சாப்பிடலாம் என்றும் பேசுவோம். எங்கள் இருவரின் எண்ணங்களும் சிறப்பாக ஒத்துப்போகின்றன. ஒன்றாக வாழ்க்கையை கட்டியெழுப்புவது ஒரு அழகான அனுபவம் என்றால், இருவருக்கும் மிகவும் பிடித்த ஒரு விஷயத்தை இணைந்து உருவாக்குவது அதைவிட சிறப்பான அனுபவமாக இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

2024-ல் திருமணம்

ரகுல் பிரீத் சிங் மற்றும் ஜாக்கி பக்னானி கடந்த 2021-ஆம் ஆண்டு தங்களது காதலை அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இதையடுத்து, 2024-ம் ஆண்டு கோவாவில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

'ராமாயணம்'

நடிகை ரகுல் பிரீத் சிங், இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் 'ராமாயணம்' திரைப்படத்தில் சூர்ப்பணகை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ஜாக்கி பக்னானி

ஜாக்கி பக்னானி, 2009-ம் ஆண்டு 'கல் கிஸ்னே தேகா' திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து 'யங்கிஸ்தான்', 'வெல்கம் டு கராச்சி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தயாரிப்பாளராக 'சர்ப்ஜித்' மற்றும் சமீபத்தில் அக்சய் குமார், டைகர் ஷெராப் நடித்த 'படே மியான் சோட்டே மியான்' உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.