சினிமா செய்திகள்

ராம் சரணின் 'பெத்தி' -ஒரு பாடலுக்கு நடனமாடும் 3 நடிகைகள்?

இந்த பாடலுக்காக பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளதுடன், நடிகைகளுக்கும் கோடிக்கணக்கில் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை,

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம் சரண் நடிப்பில் கடைசியாக வெளியான கேம் சேஞ்சர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கிய இந்த படத்தை தொடர்ந்து, அடுத்த படத்தில் வெற்றியை பெற வேண்டும் என்ற முனைப்பில், இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவாகியுள்ள 'பெத்தி' படத்தில் ராம் சரண் நடித்துள்ளார்.

இந்த படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடித்துள்ளார். மேலும், கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார், மிர்சாபூர் புகழ் திவ்யேந்து, ஜகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதிக செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படம், வருகிற ஏப்ரல் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பெத்தி படத்தில் இடம் பெற்றுள்ள சிறப்பு பாடல் ஒன்றிற்காக மூன்று நடிகைகள் நடனமாடி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சுமார் ரூ.15 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த பாடலுக்காக பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளதுடன், நடிகைகளுக்கும் கோடிக்கணக்கில் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, இதில் நடனமாடியுள்ள பூஜா ஹெக்டேவிற்கு ரூ. 4 கோடி சம்பளம், மிருணாள் தாகூருக்கு ரூ. 3 கோடி சம்பளம், ஆயிஷா கானுக்கு ரூ. 1 கோடி சம்பளம் என கூறப்படுகிறது. மேலும், இந்த பாடலுக்கான செட் மட்டுமே ரூ. 5 கோடி என்கின்றனர்.

SCROLL FOR NEXT