‘ராமாயணா’ திரைப்படத்தின் டிரெய்லர் 100 கோடி பார்வைகளைக் கடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமாயணம் காவியத்தை அடிப்படையாகக் கொண்டு, பிரம்மாண்ட பொருட்செலவில் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராமாயணா’ திரைப்படம் இந்திய சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது.
இந்தப் படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த திரைப்படத்தின் முதல் பாகம் 2026 தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கும் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்திற்கு இந்தியாவின் ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மற்றும் உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்து வருகின்றனர். சமீபத்தில் வெளியான படத்தின் கிளிம்ப்ஸ் மற்றும் டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது. இந்த படத்தின் இந்தி தியேட்டர் விநியோக உரிமையை 'தர்மா புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் சுமார் ரூ.250 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
‘ராமாயணா’ திரைப்படத்தின் டிரெய்லர் ஜூலை 30ம் தேதி காலை 4:15 மணிக்கு (பிரம்ம முகூர்த்தத்தில்) வெளியானது. பிரமாண்ட விஷுவல் எபெக்ட்ஸ், வலுவான பின்னணி இசை, கதாபாத்திரங்களின் தோற்றம் மற்றும் காட்சியமைப்புகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. டிரெய்லர் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ‘ராமாயணா’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
டிரெய்லரின் முதல் காட்சியே ராவணனான யாஷ், எப்படி அரசனாக மாறினார் எனக் காட்டப்பட்டு பின் ராமனை அறிமுகம் செய்கின்றனர். நேரடியாக இந்தியில் எடுக்கப்பட்ட இப்படம் மற்ற பான் இந்திய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.
‘ராமாயணா’ முதல் பாகத்திற்கான டிரெய்லர் அட்டகாசமான வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில், ‘ராமாயணா’ திரைப்படத்தின் டிரெய்லர் யூடியூப் உள்பட அனைத்து சமூக ஊடகங்கள் வாயிலாக 100 கோடி (1 பில்லியன்) பார்வைகளைக் கடந்ததாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில், இந்தி டிரெய்லர் மட்டும் யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்து அசத்தியுள்ளது. பான் திரைப்படமான ‘ராமாயணா’ இந்திய சினிமாவிலேயே அதிகம் பார்க்கப்பட்ட டிரெய்லர் என்கிற சாதனையைப் புரிந்துள்ளது.