சென்னை,
ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் ஆக்ஷன் த்ரில்லர் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு, இத்திரைப்படம் வருகிற நவம்பர் 27-ந் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளது.
இந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா, தற்போது இயக்குனர் ரவீந்திர புல்லே இயக்கத்தில் 'மைசா' என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். ஆக்ஷன் திரில்லரான 'மைசா' படத்தில், கோண்டு இனத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண்ணாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
இப்படத்தில் ராஷ்மிகா இதுவரை நடித்திராத வகையில் மிகவும் தீவிரமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். உடல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் கதாபாத்திரமாக இது அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
‘மைசா’ படத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக ராஷ்மிகா இடம்பெறும் நீருக்கடியில் சண்டைக்காட்சி அமைந்துள்ளது. இந்திய சினிமாவில் பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட முதல் நீருக்கடியில் சண்டைக்காட்சிகளில் ஒன்றாக இதனை படக்குழு குறிப்பிட்டுள்ளது. இந்த காட்சிகளை படமாக்கியபோது ராஷ்மிகாவுக்கு காயம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
‘மைசா’ படப்பிடிப்பின்போது ராஷ்மிகாவின் வலது இடுப்பில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் சில காலம் ஓய்வில் இருந்தார். தற்போது மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள தயாராகி வருகிறார்.
இப்படத்தில் ஈஸ்வரி ராவ், குரு சோமசுந்தரம், ராவ் ரமேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராஷ்மிகாவின் புதிய ஆக்ரோஷமான தோற்றமும், வித்தியாசமான கதாபாத்திரமும் ‘மைசா’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் ஆக்ஷன் த்ரில்லர் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு, படத்தின் ரிலீஸ் தேதியையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, ‘மைசா’ திரைப்படம் வருகிற நவம்பர் 27-ந் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
படக்குழு வெளியிட்டுள்ள புதிய போஸ்டரில் ராஷ்மிகா மிகவும் ஆக்ரோஷமான தோற்றத்தில் கையில் ரத்தக்கறை படிந்த ஈட்டியுடன் காணப்படுகிறார்.