சினிமா செய்திகள்

நீருக்கடியிலும் ஆக்சனிலும் கலக்கும் ராஷ்மிகா... 'மைசா' படத்தின் புதிய அப்டேட்!

ரவீந்திர புல்லே இயக்கும் ‘மைசா’ படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா அதிராடியான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சென்னை,

கன்னட திரையுலகில் அறிமுகமாகி, பின்னர் தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்திய நடிகையாக உயர்ந்தவர் ராஷ்மிகா மந்தனா. பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள அவர், தற்போது பல மொழிப் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

'மைசா'வில் போர்வீராங்கனையாக ராஷ்மிகா

தற்போது, ரவீந்திர புல்லே இயக்கத்தில் உருவாகி வரும் 'மைசா' திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்காத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பழங்குடியினப் பெண் மற்றும் போர்வீராங்கனையாக அவர் நடிக்கும் இந்தப் படத்தின் கிளிம்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அன்பார்முலா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கிறார்.

முக்கிய ஆக்சன் காட்சிகள் நிறைவு

'மைசா' படத்தின் முக்கிய காட்சிகள் மற்றும் சண்டைக் காட்சிகளின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக தயாரிப்பாளர் அஜய் சாய்புரெட்டி தெரிவித்துள்ளார். குறிப்பாக, படத்தின் முக்கியமான நீருக்கடியிலான ஆக்சன் காட்சி படமாக்கப்பட்டு முடிந்துள்ளதாகவும், இந்தக் காட்சிக்காக ராஷ்மிகா கடுமையாக பயிற்சி பெற்று முழு அர்ப்பணிப்புடன் நடித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மீண்டும் இணையும் ராஷ்மிகா - தாரக் பொன்னப்பா

'புஷ்பா 2' படத்தில் வில்லனாக கவனம் பெற்ற தாரக் பொன்னப்பாவும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'கேஜிஎப்', 'தேவரா', 'புஷ்பா 2' ஆகிய படங்களில் தனது நடிப்பால் கவனம் பெற்ற அவர், ராஷ்மிகாவுடன் இணையும் இரண்டாவது படமாக 'மைசா' அமைந்துள்ளது.

எதிர்பார்ப்பை அதிகரிக்கும் அர்ப்பணிப்பு

வித்தியாசமான கதைக்களம், பழங்குடியினப் பெண் என்ற புதிய தோற்றம், கடினமான ஆக்சன் காட்சிகளுக்காக ராஷ்மிகா மேற்கொண்ட பயிற்சி ஆகியவை 'மைசா' படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளன. கிளிம்ஸ் வீடியோவுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.