சித் ஸ்ரீராம் குரலில் “ரேனிகுண்டா 2” படத்தின் முதல் பாடலை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் பன்னீர்செல்வம் இயக்கி கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ரேனிகுண்டா’. அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிக்கும் 5 சிறுவர்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவானது. ஜானி, சஞ்சனா சிங், தீப்பெட்டி கணேசன் மற்றும் சனுஷா நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு கணேஷ் ராகவேந்திரா இசையமைத்திருந்தார் .
‘ரேனிகுண்டா’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை சனுஷா. மலையாளத்தில் பல படங்களில் நடித்தாலும், விக்ரம் நடித்த ‘காசி’ படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு ‘சுந்தரா டிராவல்ஸ்’ ‘பீமா’, ‘நாளை நமதே’, ‘எத்தன்’, ‘அலெக்ஸ் பாண்டியன்’, ‘கொடி வீரன்’ ஆகிய படங்களில் நடித்து தமிழில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கினார் சனுஷா.
நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்து இயக்குநர் பன்னீர் செல்வத்தின் இயக்கத்தில் கடந்த 2017 வெளியான ‘கருப்பன்’ படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இயக்குநர் பன்னீர்செல்வம் இயக்கி தயாரிக்கும் ‘ரேனிகுண்டா 2’ படத்தின் அறிவிப்பு போஸ்டர் சமீபத்தில் வெளியானது. மேலும், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டார். இதில் ஜானி, ஷாலி நிவேகாஸ், அபிமன்யு மற்றும் ஷாமி திலகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் மனு ரவிச்சந்திரன் இசையில் உருவாகும் இப்படத்தின் பாடல்களை பாடலாசிரியர்கள் யுகபாரதி மற்றும் விவேகா ஆகியோர் எழுதுகின்றனர். இப்படத்தில் கதாநாயகியாக இளம் நடிகை தீப்ஷிகா என்பவர் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘ரேனிகுண்டா 2’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இப்படம் விரைவில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், ‘ரேனிகுண்டா 2’ படத்தின் முதல் பாடலை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். ‘ஏகாவலி’ பாடலை கவிஞர் யுகபாரதி எழுத, பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.