சென்னை,
இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்றால் பலரும் ரஜினிகாந்த், ஷாருக்கான் அல்லது விஜய் ஆகியோரின் பெயர்களையே கூறுவார்கள். ஆனால் தற்போது அந்த சாதனையை தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடைசியாக அவரது நடிப்பில் வெளியான ‘புஷ்பா 2’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.1,700 கோடிக்கும் மேல் வசூல் குவித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்திற்காக அல்லு அர்ஜுன் பெற்ற முன்பணம் மற்றும் படத்தின் லாபத்தில் அவருக்கு வழங்கப்பட்ட பங்கு ஆகியவற்றை சேர்த்து அவரது சம்பளம் மட்டும் சுமார் ரூ.300 கோடி என கூறப்படுகிறது.
இதன் மூலம், ‘ஜெயிலர்’ படத்திற்காக சுமார் ரூ.250 கோடி சம்பளம் பெற்ற ரஜினிகாந்தையும், ‘ஜவான்’ படத்திற்காக ரூ.200 கோடி பெற்ற ஷாருக்கானையும், ‘தி கோட்’ படத்திற்காக ரூ.200 கோடி சம்பளம் பெற்ற விஜயையும் அல்லு அர்ஜுன் முந்தியுள்ளார்.
மேலும், அல்லு அர்ஜுனின் சம்பளத் தொகை, ‘பாகுபலி 2’ திரைப்படத்தின் மொத்த தயாரிப்பு செலவைக் கூட மிஞ்சியிருப்பதாக திரையுலக வட்டாரங்களில் பேசப்படுகிறது.
‘புஷ்பா 2’ வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இயக்குநர் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராக்கா’ திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வருகிறார். அதிக பொருட்செலவில் உருவாகி வரும் இந்தப் படம், 2027-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ச்சியான வெற்றிப்படங்கள் மற்றும் உலகளாவிய வரவேற்பால், இந்திய சினிமாவின் அதிக சம்பளம் பெறும் நடிகர்களில் முதலிடத்தை அல்லு அர்ஜுன் தற்போது பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.