சென்னை,
சமீப காலமாக தமிழ் சினிமாவில் ‘ரீ-ரிலீஸ்’ கலாச்சாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. 90கள் மற்றும் 2000களில் வெளியான ஹிட் திரைப்படங்கள் டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்படுவது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த புதிய ட்ரெண்ட் காரணமாக, பல பழைய படங்கள் மீண்டும் பெரிய திரையில் வெளியாகி வசூல் சாதனைகளையும் படைத்து வருகின்றன.
குறிப்பாக, கில்லி, படையப்பா, மங்கத்தா, சச்சின், மற்றும் 3 போன்ற படங்கள் ரீ ரிலீஸ் வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வரிசையில், 23 ஆண்டுகளுக்கு பிறகு மாதவன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ‘ரன்’ திரைப்படம் புத்தம் புது பொலிவுடன் தமிழ்நாடு, கேரளம் மற்றும் கர்நாடகாவில் ஏப்.24-ந்தேதி முதல் வெளியாகும் ன இயக்குனர் லிங்குசாமி தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், 'ரன்' திரைப்படம் மீண்டும் வெளியாவது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் இயக்குனர் லிங்குசாமி கூறியிருப்பதாவது:- 'சிவகாசி' திரைப்படமும் ஏப்.24-ந்தேதி வெளியாவதால், எங்களின் 'ரன்' திரைப்படத்தை வேறு ஒரு தேதியில் மீண்டும் வெளியிட முடிவு செய்துள்ளோம், அது பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.