மும்பை,
மலையாளத்தில் அல்போன்ஸ் புத்ரன் இயக்கிய `பிரேமம்' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சாய் பல்லவி. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்து தனது நடிப்புத்திறனால் திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்தார். துல்கர் சல்மான், நானி, தனுஷ், சூர்யா, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள சாய் பல்லவிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தென்னிந்திய மொழிகளில் கோலோச்சிய சாய்பல்லவி தற்போது, பாலிவுட் திரையுலகிலும் கால் பதித்துள்ளார்.
அமீர்கான் தயாரிப்பில் அவரது மகன் ஜுனைத் கான் நடிப்பில் சுனில் பாண்டே இயக்கியுள்ள `ஏக் தின்' படத்தில் நாயகியாக நடித்துள்ளார் சாய் பல்லவி. 2016ல் வெளியான தாயலாந்து நாட்டு படமான ` ஒன் டே' படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது இந்தப் படம். காதல் கதைக்களத்தில் உருவாகியிருக்கும் இப்படம் வருகிற 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த நிலையில், ஸ்பெஷல் ஸ்க்ரீனிங் நேற்று நடைபெற்றுள்ளது. இதில் அமீர் கான் படத்தை பார்த்துவிட்டு கண்கலங்கியுள்ளார். தனது மகன் நடிப்பையும், சாய் பல்லவியையும் பாராட்டி பேசினார். "இந்தியாவின் சிறந்த நடிகை சாய் பல்லவி" என்று அமீர் கான் கூறினார்.