கடந்த 2006-ம் ஆண்டு வெளியான ‘கேங்ஸ்டர்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் கங்கனா ரனாவத். ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘தாம் தூம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.அதன்பின்னர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெ.ஜெயலலிதா வாழ்க்கை வரலாறாக உருவாகி வெளியான 'தலைவி' படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து உருவான 'எமர்ஜென்சி' படத்தில் நடித்திருந்தார்.இமாசல பிரதேச மாநிலத்தின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்.பியாக தேர்வு செய்யப்பட்டவர் நடிகை கங்கனா ரனாவத். ‘தனு வெட்ஸ் மனு’ வெற்றிப் படங்களுக்குப் பிறகு மாதவன் மற்றும் கங்கனா இருவரும் மீண்டும் இணைந்து நடித்த ‘சர்க்கிள்’ சைக்கலாஜிக்கல் திரில்லர் படம் விரைவில் வெளியாக உள்ளது.
நடிகையும் அரசியல்வாதியுமான கங்கனா ரனாவத், தனது கருத்துக்களை அச்சமின்றி வெளிப்படுத்துவதில் பெயர் பெற்றவர். பல ஆண்டுகளாகத் திரைத்துறை மீதான தனது அதிருப்தியைத் தெரிவித்து வரும் அவர், சக பிரபலங்கள் குறித்த தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளத் தயங்கியதே இல்லை. இதற்கிடையே, இந்தியாவின் வளர்ச்சி குறித்து பல்வேறு துறை வல்லுநர்கள் விவாதிக்கும் ‘ரைசிங் பாரத் மாநாடு 2026’ டெல்லியில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கங்கனா ரனாவத்திடம் சல்மான் கான், ஷாருக்கான், ஆமிர் கான், கரண் ஜோஹர் மற்றும் ஆதித்யா சோப்ரா உள்ளிட்ட பலர் குறித்து கேட்கப்பட்டது.
‘சல்மான் கான், ஷாருக்கான் மற்றும் அமீர் கான் ஆகிய மூவரில் உங்கள் நெருங்கிய நண்பர் யார்?’ என்ற கேள்விக்கு, ‘இவர்கள் எப்போது என் நண்பர்களானார்கள்?’ என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தார். எனினும், உங்களுக்கு யாரை மிகவும் பிடிக்கும் என்று மீண்டும் கேட்கப்பட்டபோது, ‘சல்மான் மிகவும் கூலானவர் என்று நினைக்கிறேன்’ என்றார். அடுத்ததாக அனன்யா பாண்டே, ஜான்வி கபூர் மற்றும் சாரா அலி கான் ஆகியோரில் சிறந்த நடிகை யார் என்ற கேள்விக்கு சிரித்துக்கொண்டே, ‘அனன்யா பாண்டேவை தேர்ந்தெடுப்பேன்’ என்றார்.
அனுராக் காஷ்யப், கரண் ஜோஹர் மற்றும் ஆதித்யா சோப்ரா ஆகியோரில் சிறந்த இயக்குனர் யார் என்ற கேள்விக்கு ‘திரைப்படம் மற்றும் நடிப்பு குறித்த எனது ரசனையும் தரமும் உங்கள் தரத்தைப் போல அவ்வளவு தாழ்வானது அல்ல. குறைந்தபட்சம் ஒரு நல்ல பட்டியலையாவது நீங்கள் தயாரித்திருக்க வேண்டும்’ என்று யார் பெயரையும் குறிப்பிடாமல் விமர்சித்தார்.