நடிகர் சல்மான் கான் நடித்து வரும் ‘பேட்டில் ஆப் கல்வான்’ படம், ஜம்மு காஷ்மீரில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா மற்றும் சீனா இடையே நடந்த மோதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது. இரு நாடுகளிடையே நடந்த இந்த மோதல் சம்பவத்திற்கு பிறகு இரு நாடுகளிடையே வர்த்தக மற்றும் போக்குவரத்து உறவுகள் முற்றிலும் முடங்கிப்போனது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போதுதான் இந்தியா மற்றும் சீனா இடையேயான உறவில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்தியாவில் சீனாவின் முதலீட்டை மத்திய அரசு சமீபத்தில் அனுமதித்தது.
இந்த படம் 2020-ஆம் ஆண்டு ஜூன் 15-ல் இந்திய-சீன எல்லைப் பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த நிஜப் போர் மோதலை அடிப்படையாகக் கொண்டது. இதில் 16-வது பீகார் ரெஜிமெண்ட் அதிகாரி கர்னல் சந்தோஷ் பாபுவின் கதாபாத்திரத்தில் சல்மான் கான் நடிக்கிறார்.
இந்நிலையில் ‘பேட்டில் ஆப் கல்வான்’ படத்தின் டைட்டிலை திடீரென மாற்றி இருக்கின்றனர். புதிய படத்திற்கு ‘மாத்ருபூமி: மே வார் ரெஸ்ட் இன் பீஸ்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. புதிய தலைப்பை அறிவித்து வெளியிட்டு இருக்கும் போஸ்டரில் ‘போர் அமைதியில் ஓய்வெடுக்கட்டும்’ என்ற செய்தியைக் கொண்டதாக இருக்கிறது.
இந்தப் படம் வெறும் போர்க் கதையை தாண்டி போரின் மனிதப் பக்கத்தையும் அமைதியின் முக்கியத்துவத்தையும் மையமாக இருக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் விரும்புவதாக போஸ்டர்கள் கூறுகின்றன. ஏப்ரல் 17-ல் வெளியாகவிருந்த இப்படம், தற்போது ஆகஸ்ட் மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.