சினிமா செய்திகள்

'ப்ரீக்வெல்' கதைக்களத்தில் உருவாகும் படம் 'சார்பட்டா பரம்பரை 2'

முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல், அதற்கு முந்தைய காலகட்டத்தில் நடந்த சம்பவங்களை 'சார்பட்டா பரம்பரை 2' உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை,

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில், நடிகர் ஆர்யா நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. குத்துச்சண்டையை மையமாகக் கொண்டு உருவான இந்தப் படத்தில் பசுபதி, ஜான் விஜய், ஜான் கொக்கேன், ஷபீர் உள்ளிட்டோரின் கதாபாத்திரங்கள் பெரிதும் கவனம் பெற்றன.

அறிவிப்புக்கு பிறகு தாமதமான படப்பிடிப்பு

இதையடுத்து, 'சார்பட்டா பரம்பரை 2' திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்தது. இருப்பினும், சில காரணங்களால் படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி தொடங்காமல் தாமதமானது.

'ப்ரீக்வெல்' கதையாக உருவாகும் 'சார்பட்டா பரம்பரை 2'

இந்த நிலையில், 'சார்பட்டா பரம்பரை 2' திரைப்படம் தொடர்பாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தப் படம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல், அதற்கு முந்தைய காலகட்டத்தில் நடந்த சம்பவங்களை மையமாகக் கொண்ட 'ப்ரீக்வெல்' கதையாக உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

1940-50களின் சென்னை பின்னணி

படத்தின் கதை 1940 மற்றும் 1950-களின் சென்னை பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தக் காலகட்டத்தின் குத்துச்சண்டை கலாச்சாரம், சமூக வாழ்க்கை மற்றும் அரசியல் சூழலை மையமாக வைத்து திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 13-ல் படப்பிடிப்பு தொடக்கம்?

மேலும், 'சார்பட்டா பரம்பரை 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 13-ஆம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம், 'சார்பட்டா' உலகத்தின் தொடக்கக் கதையை சொல்லுமா என்ற ஆர்வமும் அதிகரித்துள்ளது.