சினிமா செய்திகள்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை - விஜய் தேவரகொண்டா அறிவிப்பு

நடிகர் விஜய் தேவரகொண்டா தனது மூதாதையர் கிராமமான தும்மல் பேட்டாவிற்கு சென்று மக்களை சந்தித்தார்.

நடிகர் விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா காதல் திருமணம் கடந்த வாரம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள சொகுசு ரிசார்ட்டில் பிரமாண்டமாக நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நாளை (4ந்தேதி) திருமண வரவேற்பு வரும் மார்ச் 4-ம் தேதி ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இதில் திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர். இதற்காக விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஜோடி பலருக்கும் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கியுள்ளனர்

இந்த நிலையில், தெலுங்கானா மாநிலம் மஹ்பூப் நகர் மாவட்டத்திலுள்ள அச்சம்பேட்டைக்கு அருகே உள்ள தனது மூதாதையர் கிராமமான தும்மல் பேட்டாவிற்கு நடிகர் விஜய் தேவரகொண்டா மனைவி ராஷ்மிகாவுடன் நேரில் சென்று கிராம மக்களை சந்தித்தார். புதிதாக திருமணம் ஆன ஜோடியை நேரில் பார்த்த மக்களும் உற்சாகமாக வரவேற்றனர்.

அப்போது அவர் பேசுகையில், “என் கிராமத்திற்கு வந்து என் கிராமத்தில் உள்ள அனைவரையும் பார்ப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் எனவும், இனிமேல் என் கிராமத்திற்கு நாங்கள் தொடர்ந்து வருவோம். இந்த ஆண்டு முதல், அச்சம்பேட்டை தொகுதியில் உள்ள 44 அரசுப் பள்ளிகளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேவரகொண்டா அறக்கட்டளை மூலம் உதவித்தொகை வழங்கப்படும்“ என்று அவர் அறிவித்தார். விஜய் தேவரகொண்டாவின் இந்த அறிவிப்பு, கல்வி உதவி எதிர்பார்த்திருந்த மாணவர்கள் மற்றும் கிராம மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.