சினிமா செய்திகள்

நடிகையிடம் பாலியல் அத்துமீறல்; இயக்குனர் ரஞ்சித்துக்கு நிபந்தனை ஜாமீன்

தனது பாஸ்போர்ட்டை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன

மலையாள திரைப்பட இயக்குநர் ரஞ்சித் மீது இளம் நடிகையிடம் பாலியல் அத்துமீறல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த ஜனவரி 9-ந்தேதி கொச்சி துறைமுகம் பகுதியில் தனது படத்தில் நடிக்க வந்த நடிகையிடம் அவர் இவ்வாறு நடந்துகொண்டதாக கூறப்படுகிறது.

இந்த புகாரின் பேரில் கேரள போலீசார் ரஞ்சித்தை கைது செய்து எர்ணாகுளம் கிளை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஜாமீன் வழங்க கோரி ரஞ்சித் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த எர்ணாகுளம் முதல் வகுப்பு நீதிமன்ற நீதிபதி கே.கே. பாலகிருஷ்ணன், அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்க உத்தரவிட்டார்.

அதன்படி, சம்பவம் நடந்ததாக கூறப்படும் கொச்சி துறைமுகம் பகுதிக்கு செல்லக்கூடாது, ஒவ்வொரு திங்கட்கிழமையும் விசாரணை அதிகாரிகள் முன்பு ஆஜராக வேண்டும், விசாரணைக்காக அழைத்தால் உடனடியாக ஆஜராக வேண்டும், தனது பாஸ்போர்ட்டை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.