சினிமா செய்திகள்

18 வயதில் நடிப்பில் இருந்து விலக நினைத்த கஜோல் - தொடர்ந்து நடிக்கத் தூண்டிய ஷாருக்கான்

நடிகை கஜோல் தனது 18 வயதில் நடிப்பை விட்டு விலக நினைத்ததாக தெரிவித்துள்ளார்.

மும்பை,

தமிழில் 'மின்சார கனவு' படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த பிரபல இந்தி நடிகையான கஜோல், நடிகர் அஜய் தேவ்கானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர், 'தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே', 'குச் குச் ஹோதா ஹை', மற்றும் 'கபி குஷி கபி கம்' போன்ற கிளாசிக் படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுசுடன் வேலையில்லா பட்டதாரி 2-ம் பாகத்தில் நடித்து இருந்தார். தற்போது இவர் இயக்குனர் ஷஷாங்கா சதுர்வேதி இயக்கியுள்ள 'டூ பட்டி' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில், கஜோலுடன் கிருத்தி சனோன் நடித்து இருக்கிறார். 'டூ பட்டி' வரும் 25-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், நடிகை கஜோல் தனது 18 வயதில் நடிப்பை விட்டு விலக நினைத்ததாக தெரிவித்துள்ளார்.

'பல வருடங்களுக்கு முன்பு நான் 'உதார் கி ஜிந்தகி' என்ற படத்தில் நடித்திருந்தேன். அப்படம் எனது 3-வது படம் என நினைக்கிறேன். அப்போது எனக்கு 17 அல்லது 18 வயது இருக்கும். இப்படத்திற்கு முன்பு நடிப்பை விட்டு விலக நினைத்தேன். அப்போதுதான் ஷாருக்கான் என்னிடம் 'எப்படி நடிக்க வேண்டும் என்று உனக்கு தெரியும் நீ கற்றுக்கொள்வாய்' என்றார். இது என்னை தொடர்ந்து நடிக்க தூண்டியது' என்றார்.

SCROLL FOR NEXT