Image Credits: Grok AI 
சினிமா செய்திகள்

பிரபல பாலிவுட் இயக்குனர் வீட்டின் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம்: மேலும் 6 பேர் கைது

பாலிவுட் இயக்குனர் ரோகித் ஷெட்டி வீட்டின் மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்திய முக்கிய குற்றவாளி உள்பட மேலும் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மும்பை,

மும்பை ஜூகு பகுதியில் உள்ள 10 மாடி கட்டிடத்தில் இயக்குனர் ரோகித் ஷெட்டியின் வீடு உள்ளது. கடந்த 1-ந்தேதி அதிகாலை அவரது வீட்டின் மீது மர்மநபர்கள் 5 முறை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினர். இதில் குண்டு அவரது வீட்டு முதல் மாடி சுவர், பால்கனி கண்ணாடியை துளைத்தது. இந்த தாக்குதலுக்கு பின்னணியில் தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் இருப்பதாக கூறப்பட்டது.

அந்த தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவம் நடந்த அன்றே தாக்குதலில் தொடர்புடைய 5 பேரை போலீசார் புனேயில் கைது செய்தனர். எனினும் வீட்டின் மீது துப்பாக்கியால் சுட்ட முக்கிய குற்றவாளி தலைமறைவானார். அவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் இயக்குனர் வீட்டின் மீது துப்பாக்கியால் சுட்டவர் உள்பட தாக்குதலில் தொடர்புடையவர்கள் ராஜஸ்தான், அரியானா மாநிலங்களில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில் அங்கு விரைந்த போலீசார் சினிமா இயக்குனர் வீட்டின் மீது துப்பாக்கியால் சுட்ட முக்கிய குற்றவாளி தீபக் சர்மா உள்பட 6 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் மும்பை அழைத்து வரப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். கோர்ட்டு அவர்களை வருகிற 25-ந்தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது. அவர்களிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இந்த விசாரணையில் ரோகித் ஷெட்டி வீட்டின் மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதன் பின்னணி பகிரங்கமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தாதா கும்பலால் நடிகர் சல்மான்கான் வீட்டின் மீதும் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதே போல தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பாபா சித்திக் மும்பையில் சுட்டுக்கொல்லப்பட்டார். கைதானவர்களுக்கு இந்த வழக்குகளிலும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரிக்க உள்ளனர்.