இம்சை அரசன் 23-ம் புலிகேசி, அறை எண் 305-ல் கடவுள், இரும்புக்கோட்டையில் முரட்டு சிங்கம், ஒரு கன்னியும் 3 களவாணிகளும், புலி ஆகிய படங்களை டைரக்டு செய்தவர், சிம்புதேவன். இவர் அடுத்து, `இம்சை அரசன் 23-ம் புலிகேசி' படத்தின் இரண்டாம் பாகத்தை டைரக்டு செய்வதாக இருந்தார்.
அதில் வடிவேலுவே கதாநாயகனாக நடிப்பதாக இருந்தார். அவர் மீது புகார் செய்யப்பட்டதன் காரணமாக, தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பஞ்சாயத்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், டைரக்டர் சிம்புதேவன் தனது அடுத்த படத்தை தொடங்கி விட்டார். படத்துக்கு, `கசட தபற' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
இதில் சந்தீப் கிஷன், ஹரீஷ்கல்யாண், சாந்தனு உள்பட பல கதாநாயகர்கள் இணைந்து நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக ரெஜினா, பிரியா பவானி சங்கர், விஜயலட்சுமி ஆகியோர் நடிக்கிறார்கள். திரைக்கதை 6 பகுதிகளாக பிரிக்கப் பட்டுள்ளன. 6 ஒளிப்பதிவாளர்கள், 6 இசையமைப்பாளர்கள் இடம் பெறுகிறார்கள். டைரக்டர் வெங்கட்பிரபு, டிரைடன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.