சினிமா செய்திகள்

சமூக வலைதளங்களிலிருந்து விலகுகிறேன் - பாடகி கெனிஷா பிரான்சிஸ்

ஆன்லைன் விமர்சனங்கள் மற்றும் சூழ்ச்சிகளால் தான் சோர்ந்துவிட்டதாக கெனிஷா இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னை,

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரியப்போவதாக அறிவித்திருந்தார். இதையடுத்து, திருமண பதிவை ரத்து செய்து, மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து வழங்கக்கோரி அவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். ரவி மோகன் - ஆர்த்தி ரவி இடையேயான விவாகரத்து வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இறுதி தீர்ப்பு வரும் வரை இரு தரப்பினரும் அவதூறு அல்லது தனிப்பட்ட விமர்சனங்களில் ஈடுபடக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில், ரவி மோகனின் தோழி கெனிஷா பிரான்சிஸ், ஆர்த்தி ரவி குறித்து அவதூறு கருத்துகளை பகிர்ந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சமூக ஊடகங்கள் உள்ளிட்ட எந்த ஊடகத்திலும் ஆர்த்தி ரவிக்கு எதிராக கருத்து தெரிவிக்கக்கூடாது என்று கெனிஷாவுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், “ஆன்லைன் விமர்சனங்கள் மற்றும் சூழ்ச்சிகளால் நான் சோர்ந்துவிட்டேன்” என்று கூறி கெனிஷா இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நான் சொல்ல வேண்டியதை விட அதிகமாகப் பேசிவிட்டேன். இந்த கதையில் அன்புடன் நுழைந்தேன், ஆனால் இப்போது அமைதியுடன் இதிலிருந்து வெளியேறுகிறேன். அகங்காரம், தீர்ப்பு மற்றும் ஜோடிக்கப்பட்ட கதைகள் நிறைந்த இடங்களில் நற்குணத்திற்கு இடமில்லாமல் போய்விடுகிறது. குழப்பங்களுக்கு எதிராகக் கருணைக்கு இங்கே இடமில்லை. பொதுமக்களே, சினிமா துறையினரே.. அவர் இப்போது உங்களுக்கே சொந்தம்.

இனி எந்த விளக்கமும் இல்லை, யாரையும் தற்காத்துப் பேசப்போவதும் இல்லை. தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட ஒரு இடத்தில் நற்குணத்தை நிரூபிக்க நான் இனி முயலப்போவதில்லை. நான் சென்னையை விட்டு வெளியேறிவிட்டேன். ஆன்லைன் விமர்சனங்கள் மற்றும் சூழ்ச்சிகளால் நான் சோர்ந்துவிட்டேன். கடவுள் வெற்றி பெறும் வரை நான் இன்ஸ்டாகிராம் மற்றும் அனைத்து சமூக வலைதளங்களிலிருந்தும் விலகுகிறேன். பெண்ணியம் வெற்றி பெற்றது, மகிழ்ச்சி தோற்றுப்போனது.” என்று பதிவிட்டுள்ளார்.