சினிமா செய்திகள்

‘அன்பே டயானா' படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய சிவகார்த்திகேயன்

பாரி இளவழகன் இயக்கி நடித்த ‘அன்பே டயானா’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

சென்னை,

‘ஜமா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் கவனம் பெற்ற பாரி இளவழகன், தற்போது புதிய திரைப்படமான ‘அன்பே டயானா’வை இயக்கி நடித்துள்ளார். இந்தப் படத்தை ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் பேமிலி’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிறுவனம் தயாரிக்கும் ஏழாவது திரைப்படமாக ‘அன்பே டயானா’ உருவாகியுள்ளது.

ரோஜாவின் மறுபிரவேசம்

இந்தப் படத்தில் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ரோஜா மீண்டும் திரையுலகில் நடிப்பிற்கு திரும்பியிருப்பது படத்தின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. இவர்களுடன் சேத்தன், பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்

பரத் சங்கர் இசையமைத்துள்ள இப்படம், சென்னை பெரம்பூரை மையமாகக் கொண்டு குடும்பத்துடன் ரசிக்கும் வகையிலான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. ‘அன்பே டயானா’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் வாழ்த்து

இந்த நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் ‘அன்பே டயானா’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்துள்ளார். படத்தை பார்த்த பிறகு, படக்குழுவினரை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்த அவர், ‘அன்பே டயானா’ வெற்றி பெற வேண்டும் என்றும் தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT