சினிமா செய்திகள்

பிறந்த நாளை முன்னிட்டு திருவண்ணாமலை கோவிலில் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்

நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு குடும்பத்துடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

திருவண்ணாமலை,

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் சிறுசிறு நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்த இவர், இன்று தவிர்க்க முடியதாக முன்னணி நடிகராகத் திகழ்கிறார்.

இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பராசக்தி’ திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாமல், கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து, ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் ‘சேயோன்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இப்படத்தை சிவகுமார் முருகேசன் இயக்க உள்ளார்.

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை, குடும்பத்துடன் அண்ணாமலையார் கோவில் சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து, பிரசாதம் வழங்கப்பட்டது.