சினிமா செய்திகள்

முதல் அமைச்சர் விஜய்க்கு இயக்குனர் சீனு ராமசாமி முன்வைத்த 6 கோரிக்கைகள்

திரைப்படத் துறையின் வளர்ச்சியை நோக்கமாக கொண்டு இந்த கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

சென்னை,

இயக்குநரும் எழுத்தாளருமான சீனு ராமசாமி, தமிழக அரசின் கவனத்திற்கு திரைப்படத் துறையின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட ஆறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக இயக்குநர் சீனு ராமசாமி வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,

லஞ்சம் மற்றும் கையூட்டு போன்ற சகஜமாகிப்போன நடைமுறைகளை எல்லாம் முழுவதுமாக விரட்டி விட முடியும் என்ற நம்பிக்கையைத் தந்து கொண்டிருக்கும் மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்களின் அரசின் கவனத்திற்கு இந்த முக்கியமான ஆறு கோரிக்கைகளைக் கொண்டு செல்ல விரும்புகிறேன்.

1. அரசுத் திரையரங்குகள்

கேரளாவின் KSFDC பாணியில், எளிய தயாரிப்பாளர்களின் திரைப்படங்களுக்காக அரசுத் திரையரங்குகள் அமைக்கப்பட வேண்டும். இது தியேட்டர் கிடைக்காமல் முடங்கிப்போகும் நல்ல கதையம்சம் கொண்ட சிறு பட்ஜெட் திரைப்படங்களுக்கு மிகப்பெரிய வாழ்வாதாரமாக அமையும்.

2. திரைப்பட ரசனைக் கல்வி

பள்ளி மற்றும் கல்லூரிகளில் திரைப்பட ரசனைக் கல்வி (Film Appreciation) கொண்டுவரப்பட வேண்டும். சினிமாவை ஒரு கலையாகப் புரிந்துகொள்ளும் பக்குவத்தை இது இளம்தலைமுறையினரிடம் உருவாக்கும்.

3. உலகத் திரைப்பட மாநாடு

தமிழ்ச் சங்க மாநாட்டைப் போல, தமிழகத்தில் உலகளாவிய திரைப்பட மாநாடு நடத்தப்பட வேண்டும். இது தமிழ்த் திரைக் கலைஞர்களையும் உலகத் தரம் வாய்ந்த படைப்பாளிகளையும் ஒரே தளத்தில் இணைக்க உதவும்.

4. ஒற்றைச் சாளர அனுமதி

நமது பாரம்பரிய மற்றும் பண்பாட்டுத் தலங்களில் எளிதாகப் படப்பிடிப்பு நடத்த ஆன்லைன் மூலம் முன் அனுமதி வழங்கப்பட வேண்டும். படப்பிடிப்புத் தளங்களில் நிலவும் அதிகாரத்துவச் சிக்கல்களையும் மறைமுகக் கையூட்டுகளையும் ஒழிக்க இதுவே மிகச்சிறந்த வழி.

5. சுயாதீனத் திரைப்பட மானியம்

லண்டன், மகாராஷ்டிர மாநிலங்களைப் போல, நட்சத்திர அந்தஸ்து இல்லாத எளிய திரைப்படங்களுக்கு அரசு சிறப்பு மானியம் வழங்க வேண்டும்.

6. கலைஞர்களுக்கான வீடுகள்

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திரைப்பட இயக்குனர் சங்கம் மற்றும் நலிவடைந்த கலைஞர்களுக்கான வீடுகள் தரும் பணியை விரைவுபடுத்தி, தகுதியான கலைஞர்களுக்கு அவை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.

லஞ்சத்தை ஒழிப்பதோடு மட்டுமல்லாமல், கலைத்துறையிலும் இத்தகைய கொள்கை ரீதியான மாற்றங்களை இந்த அரசு சாத்தியமாக்கும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.