சினிமா செய்திகள்

அளவுடன் பேசுவதுதான் சிறப்பு - ஏ.ஆர்.ரகுமான்

தேவையில்லாமல் பேசி விட்டேன் என்பதை உணர்ந்தால் அன்றைய தினம் முழுவதும் அது பற்றி யோசித்து கவலைப்படுவேன் என்று ஏ.ஆர்.ரகுமான் கூறியுள்ளார்.

இந்தியத் திரைப்பட உலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளராக இருப்பவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் மணிரத்தினம் இயக்கத்தில் 1992-ம் ஆண்டு வெளிவந்த ‘ரோஜா’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தமிழ், இந்தி, ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் 'இசைப்புயல்' என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.

7 தேசிய விருதுகளை வென்றுள்ள இவர் ‘ஸ்லம்டக் மில்லியினர்’ படத்திற்கு இசை அமைத்ததற்காக உலக அளவில் திரைத்துறையில் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதை வென்றார். இந்திய சினிமாவை தாண்டி உலக அளவில் கவனிக்கப்படும் இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர் ரகுமான், தற்போது பல்வேறு மொழி படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

மேடைகளிலும் வார்த்தைகளை அளவாகவே பயன்படுத்துவார். பேச்சு குறித்து அவர் கூறும்போது, “வார்த்தைகளை தேவையில்லாமல் உதிர்த்து விடக்கூடாது. நாம் பேசும் வார்த்தைகள் மிகவும் பலம் வாய்ந்தது. என்றாவது தேவையில்லாமல் பேசி விட்டேன் என்பதை உணர்ந்தால் அன்றைய தினம் முழுவதும் அது பற்றி யோசித்து கவலைப்பட்டு போவேன். அளவுடன் பேசுவது தான் சிறப்பு. நாம் மனிதர்கள். எனவே தவறு செய்ய அதிகமாகவே வாய்ப்பு இருக்கிறது. நல்ல விமர்சனத்தை ஏற்கும் அதே வேளையில், நம்மை நோக்கி வரும் வன்மமான விமர்சனங்களையும் கண்டுபிடித்து விடலாம். வாங்கும் காசுக்கு அவர்கள் விசுவாசமாக இந்த வேலையை செய்வார்கள். எனவே இதை எல்லாம் கண்டு கொள்ளாமல் சமாளித்து போய்க்கொண்டே இருந்தால் நல்லது” என்றார்.

SCROLL FOR NEXT