சென்னை,
நடிகர் சூர்யா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான 'கருப்பு' திரைப்படம், திரையரங்குகளில் 50 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதையொட்டி நடைபெற்ற வெற்றி விழாவில் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி, படத்தின் வெற்றி குறித்து நெகிழ்ச்சியுடன் பேசினார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான 'கருப்பு' திரைப்படம், முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழகம் மட்டுமல்லாமல் பல இடங்களிலும் வசூல் சாதனை படைத்த இப்படம், சூர்யாவின் திரைப்பயணத்தில் அதிக வசூல் செய்த திரைப்படங்களில் ஒன்றாக இடம்பிடித்துள்ளது.
திரிஷா, சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். ரூ.350 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்படும் இப்படம், 50 நாட்களாக வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது.
'கருப்பு' திரைப்படத்தின் 50-வது நாள் வெற்றி விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி, "‘கருப்பு’ ஒரு நல்ல தொடக்கம். இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பு அளித்துள்ளனர். நாம் உண்மையாக உழைத்தால் வெற்றி நிச்சயம் தேடி வரும். இந்தப் படத்தின் வெற்றிக்கு கடவுளின் கருணையும், மக்களின் அன்பும் தான் முக்கிய காரணம். இந்த வெற்றி எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களை வழங்க இந்த வெற்றி ஒரு வலுவான அடித்தளமாக அமையும்" என்று தெரிவித்தார்.
'கருப்பு' திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, ஆர்.ஜே. பாலாஜியின் அடுத்த படைப்புகள் மீதும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.