சென்னை,
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் அவரது 48-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் கடந்த மூன்று நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், கதாநாயகி கயாடு லோஹருடன் சூர்யா இணைந்து நடிக்கும் முக்கிய காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன.
சூர்யா நடித்த ‘கருப்பு’ திரைப்படம் கடந்த மே மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கிய அந்த படம், சூர்யாவுக்கு வெற்றிகரமான கம்பேக் படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து, அவரது 46-வது திரைப்படமான ‘விஸ்வநாத் & சன்ஸ்’ ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியாக உள்ளது. இதையடுத்து, ‘ஆவேஷம்’ பட இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா தனது 47-வது படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில், இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யாவின் 48-வது திரைப்படமும் உருவாகி வருகிறது. தற்காலிகமாக ‘சூர்யா 48’ என அழைக்கப்படும் இந்தப் படத்தை கர்நாடகாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிக்கிறது.
இந்தப் படத்தில் கயாடு லோஹர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், பிரகாஷ் ராஜ், யோகி பாபு, குமரவேல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ‘கருப்பு’ படத்தைத் தொடர்ந்து இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இந்தப் படத்திற்கும் இசையமைக்கிறார்.
‘ஜெய் பீம்’ வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ஞானவேல் - சூர்யா கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால், இந்தப் படம் குறித்து ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. சமீபத்தில் படத்தின் பூஜை நடைபெற்ற நிலையில், தற்போது சென்னையில் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வரும் படப்பிடிப்பில், சூர்யா மற்றும் கயாடு லோஹர் இணைந்து நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இதனால் ‘சூர்யா 48’ திரைப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.