சென்னை,
நடிகரும், முன்னாள் மைலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி.சேகர், நேற்று இரவு சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். மறைந்த முன்னாள் கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவுடன், எஸ்.வி.சேகர் இருக்கும் படத்தை வெளியிட்டு, "சுமார் 400 ஓட்டில் நான் ஜெயித்த போட்டி. மிக நேர்மையாக பரிசுப்பணத்தை கொடுத்து அனுப்பிய சில்க்" என்று பதிவிட்டு இருந்தார்.
அதை பார்க்கும் அனைவருக்கும், அது என்ன போட்டி?, எதில் எஸ்.வி.சேகர் ஜெயித்தார்? என்ற கேள்வி எழத் தொடங்கியது. அதற்கான விடையும் கீழே இருந்தது. அப்போது வாரப் பத்திரிகை ஒன்றில் வந்த படம்தான் மேலே உள்ளது. அந்த படத்திற்கு கீழே எஸ்.வி.சேகர் கூறியிருந்ததாவது:-
இது ஒரு சவால் போட்டோ. துபாயில் மோகினியுடனும், ரோகினியுடனும் தனித்தனியாய் நான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பார்த்த சிலுக்கு என்னிடம், "உங்க சிரிப்பு ரொம்ப செயற்கையா இருக்கு" என்றார்.
உடனே நான், "நாம ரெண்டு பேரும் சிரிக்கிற மாதிரி ஒரு போட்டோ எடுத்துக்குவோம். யாருடைய சிரிப்பு நேச்சுரலா இருக்குன்னு போட்டி வைப்போம். உங்களதுன்னா நீங்க பரிசைக் கொடுத்துடுங்க. என்னுதுன்னா போட்டி நடத்தற பத்திரிகை பணம் கொடுத்துடட்டும்" என்றேன். சிலுக்கும் சரி என்றார்.
அதன்பிறகு, பத்திரிகை சார்பில் போட்டி நடத்தப்பட்டது. அதில், "எங்கே எழுதுங்கள் பார்ப்போம். யார் சிரிப்பு இயற்கை. பரிசு ரூ.250" என்று கூறப்பட்டிருந்தது.
எஸ்.வி.சேகரின் இந்த பதிவு தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. போட்டியில் எஸ்.வி.சேகர் ஜெயித்ததும், பணத்தை சில்க் ஸ்மிதா வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.