ஹனிரோஸ் மீது காந்தர்வன் படத்தை இயக்கிய சலங்கை துரை ஏற்கனவே தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார்.
சம்பளம் முழுவதையும் வாங்கி விட்டு படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்க ஹனிரோஸ் மறுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் குறிப்பிட்டு இருந்தார். அந்த படத்துக்கு பிறகு ஹனிரோஸ் தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்த்து மலையாள படங்களில் மட்டுமே கவனம் செலுத்தினார்.
இந்த நிலையில் தமிழ் பட உலகினர் தன்னை கஷ்டப்படுத்தியதாக ஹனிரோஸ் புகார் கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-
நான் ஒரு படத்தில் நடிக்க தொடங்கும்போது முதலில் இயக்குனர் வினய்யனிடம்தான் தெரிவிப்பேன். அவர் சொல்லும் அறிவுரையை ஏற்று நடப்பேன். நான் சினிமாவுக்கு வந்த புதிதில் சில தமிழ் படங்களில் நடித்தேன். அப்போது நிறைய கஷ்டங்களை அனுபவித்தேன். மானேஜர் என்னிடம் பெரிய படம் என்று சொல்லி நடிக்க வைப்பார்.
ஆனால் நடிக்க ஆரம்பித்த பிறகு அந்த படத்தில் நடிப்பதால் எந்த பயனும் இல்லை என்பதை உணர்ந்து கொள்வேன். சிலர் மனரீதியாக துன்புறுத்துவார்கள். அந்த அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக்கொண்டேன்.
இவ்வாறு ஹனிரோஸ் கூறினார்.