மதுரை,
கடந்த 2022-ம் ஆண்டு நடிகர் விஷ்ணு விஷால், நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வெளியான ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து, இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் ‘கட்டா குஸ்தி 2’ படம் கடந்த 3-ந்தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் மதுரைக்கு வருகை தந்த ‘கட்டா குஸ்தி 2’ படக்குழுவினர், அங்கு ரசிகர்கள் மற்றும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது நடிகர் விஷ்ணு விஷாலிடம் செய்தியாளர் ஒருவர், “இன்றைய காலகட்டத்தில் ரீல்ஸ் மோகம் படிப்படியாக அதிகரித்து ஆட்சியை பிடிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. இது நல்லது என்று நினைக்கிறீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த விஷ்ணு விஷால், “காலத்திற்கு ஏற்றவாறு தொழில்நுட்பம் மாறிக்கொண்டேதான் இருக்கும். மாற்றம் என்பது நிலையானது. அதற்கு ஏற்றவாறு நாமும் மாறிக் கொள்ள வேண்டும். நான் சினிமாவிற்குள் வந்த சமயத்தில் ரீல்(திரைப்படச் சுருள்) மூலமாக திரைப்படங்களை எடுத்தார்கள். அதன் பிறகு டிஜிட்டல் கேமராக்கள் வந்துவிட்டன.
திரைத்துறை டிஜிட்டல்மயமாக ஆரம்பித்த சமயத்தில் குறும்படங்கள் கவனம் பெற்றன. குறும்பட இயக்குநர்களுக்கு முக்கியத்துவம் அதிகரித்தது. அந்த மாற்றத்தை ஏற்றுக் கொண்டு நான் செய்த திரைப்படங்கள்தான் ‘முண்டாசுப்பட்டி’, ‘இன்று நேற்று நாளை’ போன்றவையாகும். நான் மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாமல், குறும்பட இயக்குநர்களுடன் பணியாற்றாமல் இருந்திருந்தால் அடுத்தகட்டத்திற்கு சென்றிருக்க மாட்டேன்.
எனவே தொழில்நுட்பம் மாறும், காலம் மாறும், மக்களின் ரசனை மாறும். அதற்கு ஏற்றவாறு நாமும் மாற வேண்டும். அதன்படி இன்றைக்கு ரீல்ஸ் காலம். அதை நாம் ஏற்றுக்கொண்டு, அதற்கு ஏற்றவாறு வாழ வேண்டும். ஆனால் ரீல்ஸ் மட்டுமே வாழ்க்கை கிடையாது. ரீல்ஸை தாண்டியும் வாழ்க்கை இருக்கிறது. ரீல்ஸ் மட்டுமே பார்த்து உண்மையான வாழ்க்கையை விட்டுவிடக் கூடாது” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து ‘ஜனநாயகன்’ திரைப்படம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம். விஜய் முதல்-அமைச்சராக பதவியேற்ற பிறகு அவரது ‘ஜனநாயகன்’ திரைப்படம் வர இருக்கிறது. சில காரணங்களால் இத்தனை காலம் தாமதமாகிவிட்டது. ஆனால் படம் வரும்போது நிச்சயமாக சினிமாவுக்கு அது ஒரு கொண்டாட்டமாக இருக்கும். நானும் முதல் நாள் முதல் காட்சியை கண்டிப்பாக சென்று பார்ப்பேன்” என்று விஷ்ணு விஷால் தெரிவித்தார்.