சென்னை,
முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் பள்ளிக்கல்வித்துறை, தொல்லியல், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, தகவல் மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில்நுட்பம் மற்றும் திரைப்படத் தணிக்கைச் சட்டம், செய்தித்தாள் கட்டுப்பாடு, அரசு அச்சகம், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஒதுக்கீடு ஆகிய துறைகள் அமைச்சர் ராஜ் மோகனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கு தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் அதிருப்தி தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ராஜ்மோகனுக்கு, திரைப்படத் தொழில்நுட்பம் மற்றும் ஒளிப்பதிவுச் சட்டத் துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. என பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், தயாரிப்பாளர் டி.சிவா தமிழ் திரைப்படத் துறை அமைச்சராக ராஜ் மோகனை தேர்வு செய்ததற்க முதல்-அமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,
"மாண்புமிகு அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர் மட்டுமல்ல, அந்த துறையில் நல்ல அனுபவமும் கொண்டவர். அவர் ஒரு திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். மேலும், சினிமா துறையில் பலருடன் நல்ல நட்பும் நெருக்கமும் கொண்டவர். தமிழ் சினிமா துறையின் பிரச்சினைகள் மற்றும் தற்போதைய சூழ்நிலைகளை நன்கு அறிந்தவராக இருப்பதால், அவரை தமிழ் திரைப்படத் துறை அமைச்சராக தேர்வு செய்திருப்பது மிகவும் சரியான முடிவாகும். இந்த சிறந்த தேர்வை செய்த மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.