சினிமா செய்திகள்

4 நாட்களில் “பிளாஸ்ட்” திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

இப்படம் திரையிடப்பட்டுள்ள பெரும்பாலான திரைகள் ஹவுஸ்புல் காட்சிகளாக மாறி வருகின்றன.

சென்னை,

தமிழ் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் ஆக்சன் கிங் அர்ஜுன், தற்போது அறிமுக இயக்குனர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிளாஸ்ட்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் சுபாஷ் கே ராஜ், நடிகர் பிரதீப் ரங்கநாதன் அவர்களின் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் அபிராமி, பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம், அப்பா – மகள் உறவை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. மேலும், கேஜிஎப் படத்தின் இசையமைப்பாளரான ரவி பசூர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கராத்தே தெரிந்த அர்ஜுன் குடும்பம் எப்படி வில்லன்களுடன் மோதுகிறார்கள் என்பதை சுவாரஸ்யமாக எடுத்ததால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது, டிக்கெட் முன்பதிவுகள் அதிகரித்து வருவதால் அதிக திரைகள் இப்படத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இப்படம் கடந்த 28ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்த நிலையில், ‘பிளாஸ்ட்’ படம் 4 நாட்களில் உலகளவில் ரூ. 25.26 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் திரையிடப்பட்டுள்ள பெரும்பாலான திரைகள் ஹவுஸ்புல் காட்சிகளாக மாறி வருகின்றன. இதனால், வணிக ரீதியாகவும் இப்படம் வெற்றிப்படமாக மாறவுள்ளதால் படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.