சினிமா செய்திகள்

என் வாழ்க்கையில் கடந்த 2 ஆண்டுகள் இருண்ட காலம் - நடிகை ஹன்சிகா மோத்வானி

எனது தனிப்பட்ட வாழ்க்கையின் ரகசியத்தை பாதுகாக்க எனக்கு உரிமை உண்டு என்று நடிகை ஹன்சிகா தெரிவித்துள்ளார்.

தெலுங்கு படத்தில் அல்லு அர்ஜூன் ஜோடியாக அறிமுகமான ஹன்சிகா மோத்வானி, 2007-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். தற்போது அவரது சினிமாப் பயணம் சரிவை சந்தித்திருந்தாலும், அவ்வப்போது ஒன்றிரண்டு படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

கடந்த 2022-ம் ஆண்டு இவர், மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான சோஹைல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்தார். ஆனால் திருமணமான சில காலத்திலேயே அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே கடந்த மார்ச் மாதம் இருவரும் சட்டப்படி விவாகரத்துப் பெற்றுக்கொண்டனர். விவாகரத்தில் ஹன்சிகா எவ்வித ஜீவனாம்சமும் கோரவில்லை.

இந்நிலையில் நடிகை ஹன்சிகா திருமண விவாகரத்து குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறும்போது, “என்னைப்பற்றி எழும் கேள்விகளுக்கும், விமர்சனங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன். நான் ஒரு திரைப்பட நடிகை என்பதால் மக்கள் என்னைப் பற்றிப் பேசலாம். ஆனால் எனது தனிப்பட்ட வாழ்க்கையின் ரகசியத்தை பாதுகாக்க எனக்கு உரிமை உண்டு.

என் வாழ்க்கையில் கடந்த 2 ஆண்டுகள் மிகவும் கடினமான, இருண்ட காலம் என சொல்வேன். அந்தச் சமயத்தில் எனது தாய் மோனா மோத்வானி மற்றும் சகோதரர் பிரசாந்த் மோத்வானி ஆகியோர்தான் எனக்கு பெரும் உறுதுணையாக இருந்தனர். மன அழுத்தத்திலிருந்து மீள அவர்கள் எனக்கு பக்கபலமாக நின்றனர். இப்போது நான் அந்தத் துயரங்களிலிருந்து மீண்டு மகிழ்ச்சியாக இருக்கிறேன். தவறான உறவில் இருந்து துன்பப்படுவதை விட, அதிலிருந்து வெளியேறுவதே நல்லது. வேலையில் கவனம் செலுத்துவதே எனக்கு இப்போதைய முக்கியக் குறிக்கோள் ” என்றார்.