சென்னை,
நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (கோட்) படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.
இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதற்கிடையே, அண்மையில், 'கோட்' திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது முழுவீச்சில் கிராபிக்ஸ் பணிகள் உள்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனிடையே எக்ஸ் தளத்தில், "இந்த ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்படும் பெரிய திரைப்படம் விஎப்எக்ஸ் பணிகள் முழுமை பெறாததால், ரிலீஸ் தள்ளி போக வாய்ப்புள்ளது ," என்ற தகவல் வெளியானது. இந்த பதிவிற்கு தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, இரண்டு முறை பதில் அளித்தார்.
இந்த பதிவு 'கோட்' திரைப்படத்தை மறைமுகமாக கூறியதாக புரிந்து கொண்ட அர்ச்சனா கல்பாத்தி 'கண்டிப்பாக இந்த தகவல் உண்மை அல்ல, நாங்கள் 24 மணி நேரமும் இந்த படத்தின் பணிகளை செய்து வருகிறோம், எனவே தயவு செய்து நெகட்டிவ் மற்றும் பொய் செய்திகளை பரப்ப வேண்டாம்' என்று தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு அவர் மீண்டும் இந்த பதிவில் 'கோட்' படம் என குறிப்பிடவில்லை, அதை நான் கவனிக்கவில்லை, மன்னிக்கவும். ஆனால் அதே நேரத்தில் நாங்கள் செப்டம்பர் 5-ம் தேதி உலகம் முழுவதும் படத்தை ரிலீஸ் செய்வோம்' என்று தெரிவித்துள்ளார்.
இவரது இந்த பதிவுக்கு பதில் அளித்த எக்ஸ் தள பயனர் ஒருவர் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என கேட்டார். அதற்கு பதில் அளித்த அர்ச்சனா கல்பாத்தி "ஆகஸ்ட் 1 -ம் தேதி முதல்," என பதில் அளித்துள்ளார். அர்ச்சனா கல்பாத்தியின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram