தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகையான துஷாரா விஜயன் நடிப்பில் 'எக்ஸாம்' என்ற வெப் தொடர் விரைவில் வெளியாகிறது. சென்னையில் நடந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் துஷாரா விஜயன் பேசுகையில், "என்னுடைய ஒவ்வொரு படமும் எனக்கு முதல் படம் தான். 'சார்பட்டா' படத்துக்கு பிறகு நான் நடித்த எக்ஸாம் படம் நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியாகிறது.
குருட்டுத்தனமான நம்பிக்கையில் நான் ஓ.கே. சொல்லி நடித்த படம் இது. கதையை கேட்டவுடனேயே இது எனக்கு பிடித்துப் போனது. இந்த வாய்ப்பை விடக் கூடாது என்று திடமான முடிவு எடுத்து நடித்தேன்.
போலீசாக நடிக்கும்போது ஒரு பவர் இருக்க வேண்டும். அந்த பவரை எனக்கு படக்குழு கையில் கொடுத்தது. இது அனைவருக்கும் பிடிக்கும். இந்த கதையை நான் தேர்வு செய்யவில்லை. இந்த கதைதான் என்னை தேர்வு செய்திருக்கிறது. அப்படித்தான் இத்தனை ஆண்டுகள் நான் சினிமாவில் இருக்கிறேன்.
எனக்கு என் பெற்றோர் மிகப்பெரிய உறுதுணை. நான் 6 மாதம் வீட்டில் சும்மா இருந்தால்கூட ஒன்றும் கேட்கமாட்டார்கள். துஷாரா என்றாலே சீரியசான ரோல் தான் செய்வார்கள் என்கிறார்கள். இருக்கட்டுமே. எதுவுமே எனக்கு சந்தோஷம் தான்", என்றார்.