சினிமா செய்திகள்

இணைய தளத்தில் ஜேம்ஸ் பாண்ட் படம் கதை கசிந்தது

இணைய தளத்தில் ஜேம்ஸ் பாண்ட் படம் கதை கசிந்துள்ளது.

ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்த படங்களின் வரிசையில் 25-வது படமாக நோ டைம் டூ டை தயாராகி உள்ளது. முந்தைய கேசினோ ராயல், குவாண்டம் ஆப் சோலஸ், ஸ்கைபால், ஸ்பெக்டர் ஆகிய ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்துள்ள டேனியல் கிரேய்க் நோ டைம் டூ டை படத்திலும் ஜேம்ஸ் பாண்ட் ஆக நடித்து இருக்கிறார். கேரி ஜோஜி புகுனகா இயக்கி உள்ளார். இந்த படத்துக்கு பிறகு ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடிக்க மாட்டேன் என்று டேனியல் கிரேய்க் அறிவித்து உள்ளார்.

இது அவரது கடைசி படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படம் கடந்த ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருந்த நிலையில் கொரோனாவால் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஜேம்ஸ் பாண்ட் படத்தின் கதை எழுத்து வடிவில் இணைய தளத்தில் கசிந்து ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா போல் பெரிய தொற்றை பரப்ப வில்லன்கள் முயற்சிப்பதாகவும் அதை தடுக்க ஜேம்ஸ் பாண்ட் போராடுவதும் கதை என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. அத்துடன் ஜேம்ஸ் பாண்டுக்கு மெடலின் ஸ்வான் என்ற பெண்ணுடன் திருமணம் நடப்பதாகவும் அவருக்கு மெத்தில்டே என்ற பெயரில் 5 வயது மகள் இருப்பதாகவும் கதையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த கதை இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.

SCROLL FOR NEXT