சென்னை,
'டாக்ஸிக்' திரைப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை 07.01 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த மிரட்டலான டிரெய்லரை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
'கே.ஜி.எப்' படங்களின் வெற்றிக்குப் பிறகு நடிகர் யாஷ் நடித்துள்ள 'டாக்ஸிக்' திரைப்படத்தை இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த கேங்ஸ்டர் டிராமா படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அண்மையில் வெளியான 'லேடீஸ் அண்ட் லேடீஸ்' அறிமுக வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
1940 முதல் 1970-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கோவாவில் நடைபெற்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் மாபியா கும்பல்களின் பின்னணியை மையமாகக் கொண்டு இந்த ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் உருவாகியுள்ளது.
சமீபத்தில் வெளியான 'டாக்ஸிக்' டீசர் சமூக வலைதளங்களில் வைரலானது. அதே நேரத்தில், அதில் இடம்பெற்ற சில காட்சிகள் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்களும் எழுந்தன. குறிப்பாக, சில காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியதால் டீசர் பரபரப்பாக பேசப்பட்டது. இருந்தபோதிலும் அதிக பார்வையார்களை பெற்றது.
இந்த படம் வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், 'டாக்ஸிக்' திரைப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை 07.01 மணியளவில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதையடுத்து, யாஷின் மிரட்டலான டிரெய்லரை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.