சினிமா செய்திகள்

என்னை இரும்பு கம்பியால் அடித்தார்கள்- பிரபலங்கள் மீது பிக்பாஸ் திவாகர் போலீஸில் புகார்

கானா வினோத், புகழ், மாகாபா ஆனந்த் ஆகியோர் தன்னை தாக்கியதாக பிக்பாஸ் பிரபலம் திவாகர் போலீஸில் புகாரளித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் 7வது சீசன் ஏப்ரல் 4 ம் தேதி தொடங்கியது. பிரபலமான இந்த நிகழ்ச்சியில் இந்த முறை திருமணமான ஜோடிகளும் அவர்களுடன் இணைந்து கோமாளிகளும் சமைக்கும் விதமாக நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த நிலையில், நிகழ்ச்சியின் படப்பிடிப்பின் போது இந்த வாரம் ஒரு பரபரப்பான சம்பவம் நடைபெற்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் பிரபலமும் பாடகருமான கானா வினோத், விஜய் டிவி புகழ், மாகாபா ஆனந்த் ஆகிய 3 பேரும் இணைந்து பிக் பாஸ், இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமான திவாகரை குக் வித் கோமாளி நிகழ்ச்சி அரங்கில் வைத்து அடித்ததாக அவர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

இதுபற்றி திவாகர் வெளியிட்ட வீடியோவில், “குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஏப்ரல் 10 அன்று கலந்துகொண்டேன். அங்கு கானா வினோத் என்னைப் பற்றியும் என் குடும்பத்தைப் பற்றியும் தகாத வார்த்தகளில் பேசினார். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பேசியதால் கானா வினோத், புகழ் இணைந்து என்னை அடித்தனர்.இவர்களுடன் மாகாபா ஆனந்த் குடிபோதையில் என்னை இரும்பு கம்பியால் அடித்தார். அவர் அடித்ததில் என் காலில் ரத்தக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஈவிபி பிலிம் சிட்டி அருகே உள்ள நசரத்பேட்டை காவல் நிலையத்தில் இதுபற்றி புகாரளித்துள்ளேன்” என்று தெரிவித்தார்.