சினிமா செய்திகள்

"ஆங்கிலம் தெரியாததால் என்னை கேலி செய்தார்கள்" - பாக்யஸ்ரீ போர்ஸ் உருக்கம்

சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது சிறுவயதில் சந்தித்த மறக்க முடியாத அனுபவம் குறித்து பாக்யஸ்ரீ போர்ஸ் மனம் திறந்து பேசியுள்ளார்.

'மிஸ்டர் பச்சன்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ், தொடர்ந்து 'காந்தா', 'கிங்டம்', 'ஆந்திரா கிங் தாலுகா' உள்ளிட்ட படங்களில் நடித்தார். இருப்பினும், அந்த திரைப்படங்கள் வணிக ரீதியாக எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், பல்வேறு விமர்சனங்களையும் அவர் சந்தித்தார்.

இந்த நிலையில், சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான 'லெனின்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

'சேயோன்' படத்தில் நாயகியாக போர்ஸ்

'லெனின்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'சேயோன்' திரைப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடிக்க உள்ளார். மதுரை பின்னணியில் ஆக்ஷன், நகைச்சுவை மற்றும் குடும்ப பொழுதுபோக்கு அம்சங்களுடன் இப்படம் உருவாகி வருகிறது.

சிறுவயதில் சந்தித்த கசப்பான அனுபவம்

இந்த நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது சிறுவயதில் சந்தித்த மறக்க முடியாத அனுபவம் குறித்து பாக்யஸ்ரீ போர்ஸ் மனம் திறந்து பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், "நைஜீரியாவில் பள்ளியில் படித்தபோது எனக்கு ஆங்கிலம் சரியாக பேசத் தெரியாது. அதனால் அங்கிருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர்கள் என்னை கேலி செய்து அவமானப்படுத்தினர். அந்த சம்பவங்கள் என்னை மிகவும் பாதித்தன," என்றார்.

அவமானத்தை வெற்றியாக மாற்றிய நடிகை

மேலும் அவர் கூறுகையில், "அந்த வலியை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டேன். ஆங்கிலத்தை நன்றாக கற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து தொடர்ந்து முயற்சி செய்தேன். இன்று நான் சரளமாக ஆங்கிலம் பேசுவதற்கு அந்த அனுபவங்கள்தான் முக்கிய காரணம்," என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.