சென்னை,
முன்னணி நடிகரான விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபது. இவர் அனல் அரசு இயக்கத்தில் உருவான 'பீனிக்ஸ்' படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். சமீபத்தில் சென்னையில் நடந்த இந்த பட விழாவில், சூர்யா வாயில் 'சுவிங்கம்' மென்றபடி, ரசிகர்களுடன் கலந்துரையாடியது விமர்சனத்துக்குள்ளானது. 'முதல் படத்திலேயே பந்தா தேவையா...', என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டது.
இந்தநிலையில் 'பீனிக்ஸ்' படத்தின் வெற்றியைப் படக்குழுவினர் கொண்டாடிய விழாவில் இயக்குனர் அனல் அரசு பங்கேற்று பேசும்போது, 'பீனிக்ஸ்' படம் சூர்யாவுக்காக மட்டும் எடுக்கப்பட்டது கிடையாது. சூர்யா மீது குற்றச்சாட்டு கூறுவோருக்கும், அவரை விமர்சித்து டிரோல் செய்வோருக்கும் நான் சொல்லிக்கொள்வது, 'நீங்கள் சூர்யாவின் வாழ்க்கையில் மட்டும் விளையாடவில்லை, இந்த படத்தின் மூலமாக புதிதாக சினிமாவில் எட்டிப்பார்த்துள்ள அனைவரது வாழ்க்கையிலும் விளையாடுகிறீர்கள்.
ஒரு படத்தில் பலரது வாழ்க்கை அடங்கியிருக்கிறது என்று உணர்ந்து, யோசித்து செயல்பட்டால் நல்லது. (சூர்யாவை நோக்கி) தவறு என்று தெரிந்தால் உடனடியாக மன்னிப்பு கேட்டுவிடுங்கள். விமர்சிப்போரையும் உறவுகளாக பாருங்கள். மன்னிப்பு பல பிரச்சினைகளை தீர்த்துவிடும்'', என்றார்.