சென்னை,
‘டாக்சிக்’ திரைப்படம் திரைக்கு வர உள்ள நிலையில், நடிகை கியாரா அத்வானி இப்படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
‘டாக்சிக்’ படத்தில் கியாரா அத்வானி ‘நதியா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் திரைக்கு பின்னாலான (BTS) காட்சி ஒன்றை அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.
அதில், இப்படத்தில் தான் நடித்துள்ள கதாபாத்திரம் தனக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும், படப்பிடிப்பின்போது எதிர்கொண்ட புதிய அனுபவங்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், ’திரைப்படங்கள் நமக்கு இதுவரை தெரியாத புதிய உலகங்களை அறிமுகப்படுத்தும் தன்மை கொண்டவை. ஒவ்வொரு புதிய கதாபாத்திரமும், அதில் இருக்கும் சவால்களும் நமக்குள் இருக்கும் புதிய திறமைகளை அறிந்துகொள்ள உதவுகின்றன.
பழக்கமில்லாத விஷயங்களை தைரியமாக எதிர்கொள்வது, புதிய விஷயங்களை ஆர்வத்துடன் கற்றுக்கொள்வது மற்றும் அந்த அனுபவத்தை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வது ஆகியவற்றை ‘டாக்சிக்’ படம் எனக்கு கற்றுக்கொடுத்தது. என்னை பொறுத்தவரை, நம்மை பயமுறுத்தும் புதிய சவால்களை தைரியமாக ஏற்றுக்கொண்டு, அந்த பயணத்தை ரசிப்பதில்தான் உண்மையான வளர்ச்சி இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.
யாஷ் கதாநாயகனாக நடித்துள்ள ‘டாக்சிக்’ திரைப்படத்தை கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். இப்படம் வருகிற 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.