தஞ்சாவூர்,
ஜெயம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ரவி மோகன். தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வரும் ரவி மோகன், நடிப்பில் கடைசியாக திரையரங்குகளில் வெளியான படம் ‘பராசக்தி’. இந்தப் படத்தில் எதிர்மறை கேரக்டரில் நடித்திருந்தார் ரவி மோகன். அவரது நடிப்பு படத்தில் பெரிதும் பேசப்பட்டது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து, ‘டாடா’ பட இயக்குனர் கணேஷ் பாபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கராத்தே பாபு’ படத்தில் நடித்துள்ளார். அரசியல் கதையை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.
படப்பிடிப்புகளுக்கு நடுவே நடிகர் ரவி மோகன் தஞ்சாவூரில் நகைக்கடை திறப்பு விழா ஒன்றில் பங்கேற்றார். ரவி மோகனுடன் கெனிஷாவும் சென்றிருந்தார். அப்போது மேடையில் பேசிய நடிகர் ரவி மோகனிடம் டயலாக் ஏதாவது பேசுமாறு ரசிகர்கள் கேட்டனர். அதற்கு “பொன்னியின் செல்வன்” படத்தில் வரும் டயலாக்கை சொல்கிறேன் என்று கூறி, “மக்களை நம்பாதவன், மக்களை ஆள முடியாது” என்றார்.
அதேபோல் ‘கராத்தே பாபு’ பட டயலாக்கையும் பேசிக் காட்டினார். “நீ தொழிலுக்காக அரசியல் பண்றவன்... நான் அரசியலையே தொழிலா பண்றவன்” என கூறினார். தற்போதைய தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் ரவி மோகனின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.