சினிமா செய்திகள்

"தவறாக புரிந்து கொண்டவர்கள் தான் தற்குறிகள்!" - சர்ச்சைக்கு மாஸ்டர் மகேந்திரன் விளக்கம்

மின்தடை பிரச்சினை குறித்து பேசிய மாஸ்டர் மகேந்திரனின் கருத்துகள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தின.

சென்னை,

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது கதாநாயகனாக வலம் வருபவர் மாஸ்டர் மகேந்திரன். 'நாட்டாமை', 'கோயம்புத்தூர் மாப்பிள்ளை', 'நட்புக்காக' உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அவர், பின்னர் 'விழா' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அண்மையில் வெளியான '29' திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சர்ச்சையை ஏற்படுத்திய மின்சாரக் கருத்து

சமீபத்தில் சென்னையில் நிலவி வரும் மின்தடை பிரச்சினை குறித்து பேசிய மாஸ்டர் மகேந்திரனின் கருத்துகள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தின. "சில மாதங்கள் பொறுத்துக் கொள்ள முடியாதா?", "தேவைப்பட்டால் என் வீட்டு மின்சாரத்தைக் கூட எடுத்துக் கொள்ளுங்கள்" என அவர் பேசியதாக பரவிய காணொளிகள் பலரது எதிர்ப்பை கிளப்பின. இதையடுத்து, "மின்சாரம் இல்லாமல் ஒரு மாதம் வாழ முடியுமா?" என பலரும் கேள்வி எழுப்பியதுடன், சமூக வலைதளங்களில் அவரை விமர்சித்து பதிவுகளும் வெளியாகின.

"என் கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது"

இந்த நிலையில், தனது கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், சமூக வலைதளங்களில் பகிரப்படும் குறுகிய காணொளிகளில் தாம் கூறிய கருத்துகள் முழுமையாக இடம்பெறுவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், "நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. மின்சாரத் தேவையை சமாளிக்க சூரிய ஒளி மின்சாரமே சிறந்த தீர்வாக இருக்கும் என்பதையும், கொச்சி விமான நிலையம் போன்று நம் மாநிலத்திலும் சூரிய ஒளி மின்சார திட்டங்களை ஏன் விரிவுபடுத்தக் கூடாது என்பதையுமே நான் குறிப்பிட்டேன்" என்று விளக்கம் அளித்துள்ளார்.

"எனது கருத்தில் உறுதியாக இருக்கிறேன்"

என்னை திட்டி தீர்ப்பவர்கள் உண்மையை அறியாமல் செயல்படுகிறீர்கள். தவறாக புரிந்து கொண்டவர்கள் தான் தற்குறிகள். எனது கருத்தில் நான் உறுதியாக இருக்கிறேன்." என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த விளக்கம் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.