சென்னை,
தமிழ் திரையுலகில் வெற்றிகரமான கூட்டணிகளில் ஒன்றாகப் பார்க்கப்படும் விஜய் - அனிருத் இணை, பல மறக்க முடியாத பாடல்களையும் பின்னணி இசைகளையும் ரசிகர்களுக்கு வழங்கியுள்ளது. விஜய்யின் கடைசி திரைப்படமாக வெளியான 'ஜனநாயகன்' படத்துடன் இந்த கூட்டணி நிறைவடைந்துள்ள நிலையில், இசையமைப்பாளர் அனிருத் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
'மறக்க முடியாத பயணம்'
தனது சமூக வலைதளப் பதிவில், "'ஜனநாயகன்', 'லியோ', 'பீஸ்ட்', 'மாஸ்டர்', 'கத்தி' என உங்களுடன் இணைந்து பயணித்தது அற்புதமான மற்றும் உணர்வுபூர்வமான அனுபவமாக இருந்தது" என்று அனிருத் குறிப்பிட்டுள்ளார். மேலும், "அளவற்ற நம்பிக்கையையும், என்றும் மறக்க முடியாத நினைவுகளையும் அளித்த விஜய் சாருக்கு நன்றி. அந்த இசை என்றென்றும் வாழும்" என்றும் தெரிவித்துள்ளார்.
வைரலாகும் பதிவு
அனிருத்தின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. விஜய் - அனிருத் கூட்டணி மீண்டும் இணையாது என்ற உணர்வு ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், இந்த பதிவு இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.