பொன்னியின் செல்வன் படத்துக்கு பிறகு திரிஷாவின் மார்க்கெட் ஏறுமுகமாகி உள்ளது. இந்த ஒரு படத்தின் வெற்றியால் சம்பளத்தை இரு மடங்காக உயர்த்தி விட்டார் என்கின்றனர். இப்போது ரூ.3 கோடி சம்பளம் கேட்கிறாராம். பொன்னியின் செல்வன் படத்துக்கு முன்பே கர்ஜனை, ராங்கி, சதுரங்க வேட்டை இரண்டாம் பாகம் ஆகிய படங்களில் திரிஷா நடித்து முடித்து ரிலீசுக்காக காத்து இருந்தார். ஆனால் அந்த படங்கள் சில பிரச்சினைகள் காரணமாக திட்டமிட்டபடி வெளியாகாமல் பல வருடங்களாக முடங்கி உள்ளன. நிறைய தடவை திரைக்கு கொண்டுவர முயற்சிகள் எடுத்தும் நடக்கவில்லை. ஏற்கனவே திரிஷா நடிப்பில் வந்த சில படங்கள் எதிர்பார்த்தபடி வசூல் பெறாததால் 3 படங்களுக்கான வியாபாரத்திலும் இழுபறி ஏற்பட்டதாக பேசப்பட்டது. தற்போது பொன்னியின் செல்வன் வெற்றி காரணமாக பல வருடங்களாக முடங்கி இருக்கும் திரிஷாவின் இந்த மூன்று படங்களுக்கும் மவுசு ஏற்பட்டு உள்ளது. 3 படங்களையும் அடுத்தடுத்து திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடக்கின்றன. இது திரிஷா ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.